Saturday 10 September 2011

நடிகை காந்திமதி காலமானார்


சென்னை, செப். 9: பிரபல நடிகை காந்திமதி (65) உடல் நலக் குறைவால் சென்னையில் வெள்ளிக்கிழமை காலமானார்.இதயக் கோளாறு, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காந்திமதி வடபழனியில் உள்ள தனது வீட்டில் வெள்ளிக்கிழமை காலமானார்.காந்திமதியின் உடல் கண்ணம்மா பேட்டை மின் மயானத்தில் வெள்ளிக்கிழமை மாலை தகனம் செய்யப்பட்டது.திருமணம் செய்து கொள்ளாத காந்திமதி, தன் தம்பி, தங்கை மகன்களான பாலசுப்பிரமணியன், தீனதயாளன் ஆகியோரை தத்து எடுத்து வளர்த்து வந்தார்.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த காந்திமதி தொடக்கத்தில் நாடகங்களில் நடித்து வந்தார். எழுத்தாளர் ஜெயகாந்தனின் கதையான "யாருக்காக அழுதான்' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி ஆகியோர் நடித்த பெரும்பாலான படங்களில் குணச்சித்திர வேடங்கள் ஏற்று புகழ் பெற்றார்.பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த "16 வயதினிலே', "கிழக்கே போகும் ரயில்', "மண்வாசனை' உள்ளிட்ட படங்கள் அவரது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தின. "முத்து', "விருமாண்டி' உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.விஜயகாந்த், சரத்குமார் அஞ்சலி: தே.மு.தி.க. தலைவரும், நடிகருமான விஜயகாந்த், நடிகரும், சட்டப் பேரவை உறுப்பினருமான சரத்குமார், நடிகர்கள் கவுண்டமணி, செந்தில், டி.பி.கஜேந்திரன் உள்ளிட்ட திரையுலகினர் காந்திமதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.நடிகர் சங்கம் இரங்கல்: தமிழ் மக்களை மகிழ்வித்த கலைஞர்களில் காந்திமதி முக்கியமானவர். அவரது இழப்பு தமிழ் ரசிகர்களுக்கும், கலை உலகுக்கும் பெரும் இழப்பு என நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment